திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.57 திருவொற்றியூர் பண் - பஞ்சமம் |
விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ
டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றியூரே.
|
1 |
பாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனா
ஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.
|
2 |
விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகி
அளிதரு பேரருளான் அரனாகிய ஆதிமூர்த்தி
களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றியூரே.
|
3 |
அரவமே கச்சதாக அசைத்தானலர்க் கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரையார்வரை மார்பன்எந்தை
பரவுவார் பாவமெல்லாம் பறைத்துப்படர் புன்சடைமேல்
உரவுநீ ரேற்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
|
4 |
விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.
|
5 |
கமையொடு நின்றசீரான் கழலுஞ்சிலம் பும்ஒலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான் விரிகொன்றையுஞ் சோமனையும்
அமையொடு நீண்டதிண்டோள் அழகாயபொற் றோடிலங்க
உமையொடுங் கூடிநின்றான் உறையும்மிடம் ஒற்றியூரே.
|
6 |
நன்றியால் வாழ்வதுள்ளம் உலகுக்கொரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலுங் கருமால்வரை யேசிலையாப்
பொன்றினார் வார்சுடலைப் பொடிநீறணிந் தாரழல்அம்
பொன்றினால் எய்தபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
|
7 |
பெற்றியாற் பித்தனொப்பான் பெருமான்கரு மானுரிதோல்
சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன் னுடலைச்செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றுமாள்வான் உறையும்மிடம் ஒற்றியூரே.
|
8 |
திருவினார் போதினானுந் திருமாலுமோர் தெய்வமுன்னித்
தெரிவினாற் காணமாட்டார் திகழ்சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ
டொருவனாய் நின்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றியூரே.
|
9 |
தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த்துழல்வார்
ஆகம செல்வனாரை அலர்தூற்றுதல் காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக்கொள்ளன்மின் ஏழுலகும்
ஓகைதந் தாளவல்லான் உறையும்மிடம் ஒற்றியூரே.
|
10 |
ஒண்பிறை மல்குசென்னி இறைவன்னுறை யொற்றியூரைச்
சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும் பரவிப்பணிந் தேத்தவல்லார்
விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |